குறைந்த வசதியுடையோருக்கான வீட்டுத் திட்ட நடவடிக்கையை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நேற்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறைந்தளவிலான வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான 7,500 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, குறித்த திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிப்பதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் இதன்போது பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.
புதிதாக நிர்மாணிக்கப்படும் 7,500 வீடுகளில், 4,000 வீடுகள் குறைந்த வசதி கொண்ட குடியிருப்புகளில் வசிப்போரை மீள் குடியேற்றுவதற்காகவும், எஞ்சிய 3,000 வீடுகள் நடுத்தர வர்க்கத்தினருக்காகவும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடுத்தர வர்க்கத்தினருக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் போது குறைந்தபட்ச ஆரம்ப கொடுப்பனவில் வீட்டு உரிமையை பெற்றுக் கொடுக்கும் முறையொன்றை உருவாக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, நடுத்தர வர்க்கத்தினருக்கான வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்தும் போது, பயனாளர்களுக்கு 30 ஆண்டுகள் வரை 6.25 என்ற வட்டி வீதத்தில் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.