கம்பளை பகுதியில் மேலும் 25 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று (19) இரவு அடையாளம் காணப்பட்டனர்.
கம்பளை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் ஏழு பேருக்கும், தொலுவ சுகாதார பிரிவில் மூவருக்கும், உடபளாத்த சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளமை PCR பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றாளர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 300 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் PCR பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்படவுள்ளன.
$ads={2}
கம்பளை வைத்தியசாலையில் பணிபுரியும் பெண் வைத்தியரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து அவரின் குடும்ப உறுப்பினர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது அவரின் தாய், தந்தை மற்றும் மேலும் ஒரு குடும்ப உறுப்பினருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து பெண் வைத்தியரின் தந்தைக்கு உரித்தான கோழிக்கடையில் தொழில் புரியும் ஊழியர்களிடம் PCR பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்போதும் சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.
இந்நிலையில் நேற்று மேலும் சிலருக்கு தொற்று உறுதியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கம்பளை நகரில் எட்டு கோழிக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஏனைய சில வர்த்தக நிலையங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கம்பளை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.