கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரியும் ஐக்கிய மக்கள் சக்தியினால் பொரளை கனத்தை மயானத்துக்கு முன்பாக அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
$ads={2}
அமைதிப் போராட்டம் இன்று (23) காலை 10 மணியளவில் ஆரம்பித்தது. போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தவர்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டலின் பிரகாரம் சமூக இடைவெளியை பேணி அமைதியான முறையில் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு கனத்தை நுழைவாயலுக்கு முன்பாக வரிசையாக இருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்வர்கள் மனித உரிமைகளை பாதுகாரு, பலவந்தமாக எரிப்பதை நிறுத்து, முஸ்லிம்களின் மத உரிமையை இல்லாமலாக்காதே, மனிதாபிமானம் எங்கே, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலை பின்பற்று, இனவாதம் வேண்டாம் போன்ற வாசகங்கள் பொறித்த பதாதைகளை காட்சிப்படுத்தியவாறும் கைகளில் வெள்ளைத் துணியைக் கட்டியவாறும் காணப்பட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தபோதும் அதன் பங்காளி கட்சிகளான முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மெளலானா, அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அதேபோன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடிவேல் சுரேஷ், மனோகணேசன் ஆகியோருகம் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் இந்த அமைதிப் போராட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தபோதும், எதிர்க்கட்சியில் இருந்து அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.ஆர்.எம்.வஸீம்