இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ள பொது சுகாதார பரிசோதகர் சம்மேளன செயலாளர் எம். பாலசூரிய, கொழும்பின் - மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளுமெண்டல், கிராண்ட்பாஸ் மற்றும் பொரள்ளை போன்ற பகுதிகளிலிருந்து பல கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தொற்றுக்கள் ஏற்கனவே நாட்டில் ஏற்பட்ட எந்தவொரு கொரோனா கொத்துக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் பதிவாகியுள்ளன.
நடைமுறையில் உள்ள கொரோனா கொத்துக்களுடன் எந்த தொடர்பும் இல்லாமல் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்படும் போது அங்கே சமூக பரிமாற்றம் நடைபெறுகிறது என்று கூறமுடியும்.
இதுபோன்ற தொற்றுக்கள் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறினாலும் களத்தின் பணியாற்றும் தாங்கள் ஆதாரங்களை சுட்டிக்காட்டியுள்ளதாக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்திலிருந்தும் இதுபோன்ற தொற்றுக்கள் பதிவாகியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
ஏனைய மாவட்டங்களிலிருந்தும் தொற்றுக்கள் பதிவாகியுள்ள சூழ்நிலையில், மக்கள் மற்றும் அதிகாரிகள் இந்த சூழ்நிலையில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ் நியூஸ்
இது தொடர்பாக தாம் தொடர்புடைய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக பாலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் உள்ள சுகாதார அமைப்பானது நிலைமையை கட்டுப்படுத்த போதுமானது என்றும் அவர் கூறினார். இருப்பினும், இது சரியான கண்காணிப்பு செயல்முறையுடன் செய்யப்பட வேண்டும்.
பயணக் கட்டுப்பாடு முறையாக கவனிக்கப்பட்டு சரிபார்க்கப்படாததால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என அறிவிக்கப்பட்ட புளூமெண்டால் போன்ற பல பகுதிகள் இன்னும் பாதுகாப்பாக இல்லை என்றும் பாலசூரிய தெரிவித்துள்ளார்.