நாட்டில் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் மீது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் ஆரம்பத்தில் பரவிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பின்னர், பொதுமக்களும், ஊடகங்களும் தங்கள் பொறுப்புகளை புறக்கணித்தனர்.
கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் திறன் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு உண்டு. எனினும் பொதுமக்களின் ஆதரவு அதற்கு தேவை என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (09) நடைபெற்ற கொரோனா தடுப்பு தொடர்பான பணிக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தொற்றுநோய் பரவுவதை எதிர்கொள்வதில் மூன்று முறைகள் உள்ளன. முதலாவது ஊரடங்கு உத்தரவு விதித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதுவும் செய்யக்கூடாது. நோயைக் கட்டுப்படுத்தும் அதேநேரம் இயல்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது மூன்றாவது விருப்பமாகும். எனவே அதனை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது.
சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தொற்றுநோய் உலகத்திலிருந்து அழிக்கப்படும் வரை நாடு மூடியிருக்க முடியாது. எனவே யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும்.
ஏறக்குறைய 40 நாட்களாக மூடப்பட்ட பகுதிகளிலிருந்தும் தொற்றாளிகள் தொடர்ந்தும் கண்டறியப்படுகிறார்கள். எனவே முடக்குதலால் மட்டுமே தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை இது காட்டுகிறது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
PCR பரிசோதனைகளை நடத்துவதற்கு அரசாங்கத்தின் அன்றாட செலவு 60 மில்லியன் ரூபாவாக உள்ளது. அத்துடன் தனிமைப்படுத்தல் உட்பட முழு செயல்முறையிலும் தினசரி பெரும் தொகை செலவிடப்படுகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.