முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அதிலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜனாஸா எரிப்பு தொடர்பான நியாயமான காரணங்களை ஊடகங்களுடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு புத்திஜீவிகளுக்கு இருக்கின்றது. என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடந்து கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்ற அடிப்படையில் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல பிரச்சினைகள் இன்று சவாலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.எனவே அது சம்மந்தமாக குறிப்பாக கொரோனாவினால் மரணமடையும் ஜனாஸாக்களை அடக்கம் செய்யும் விடயத்திலும் கூட அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கூட சவாலுக்கு உட்படுத்துகின்ற செயற்பாடுகள் இன்று தென்னிலங்கையில் சில ஊடக நிறுவனங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இன்று மிக தீவிரமான பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே இது சம்மந்தமாக எங்களுடைய முஸ்லிம் சமூகத்தில் உள்ள புத்திஜீவிகள் அதிலும் சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் நியாயமான காரணங்களை ஊடகங்கள் ஊடாக தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு இருக்கின்றது.
மேலும் எமது சமூகத்தில் சிறந்த ஊடகவியலாளர்கள், சிறந்த ஊடக நிறுவனங்கள் வலுவான முறையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் அதற்காக சிலோன் மீடியா போரம் வலுவான திறமையான பல மொழிகளிலும் செய்திகளை கொண்டு செல்லுகின்ற திறமை மிக்க ஊடக வல்லுனர்களை உருவாக்க வேண்டும். அதற்காக வேண்டி முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்” என குறிப்பிட்டார்.