சாக்குப்போக்குக் காரணங்கள் கூறாமல், பொதுமக்களுக்கு முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முழுமையாக முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கொரோனா வைரஸ் தொற்றின் பேராபத்து மையமாக மேல் மாகாணம் விளங்குகின்றது. இந்நிலையில், இம்மாகாணத்தை 10 நாட்கள் மட்டும் முடக்கியிருந்த அரசு, அதனை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.
இதனால் கொரோனா தொற்று பரவல் நாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.
இதனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும். சாக்குப்போக்கு காரணங்கள் கூறாமல் முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி வழங்கவேண்டும்.
அந்தக் காலப்பகுதிக்குள் நாடெங்கும் PCR பரிசோதனைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.