வடக்கில் யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வீட்டிற்கு மின்சார இணைப்பு கூட இல்லாத நிலையிலும் குப்பி விளக்கில் கல்வி கற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் நிலை பெற்று உடையார் கட்டு அரசினர் தமிழ் கலைவன் பாடசாலையின் மாணவி நிசாந்தன் நிதர்சனா சாதித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
இவர்களில் நிசாந்தன் நிதர்சனா என்ற மாணவி 194 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்துள்ளார்.
நாளாந்தம் கூலி தொழில் செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தில் முதற் பிள்ளையாகப் பிறந்த நிதர்சனா சிறு வயதிலிருந்து பாடசாலையில் இடம்பெறும் பரீட்சைகளில் முதல் நிலையினை பெற்று பாடசாலையில் இடம்பெறும் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
$ads={2}
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குரவில் பகுதியில் வாழ்ந்து வரும் இந்த மாணவியின் வீட்டிற்கு இதுவரை மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள முடியவில்லை.
வீட்டிலிருந்து 50 மீற்றர் தொலைவு வரை மின்சார இணைப்பு வந்துள்ள போதும் இவர் மின்சாரம் இல்லாத வீட்டிலேயே குப்பி விளக்கில் கல்விகற்றுச் சித்தியடைந்துள்ளார்.
எந்தவித பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லாமல் பாடசாலை கல்வியும் வீட்டுக் கல்வியுமாக கல்வி கற்று வந்த மாணவி கொரோனா காலத்தில் பாடசாலை இல்லாத நிலையில் தொலைபேசி ஊடாக ஆசிரியர்கள் அனுப்பும் வினாக்கொத்துக்களை சரியாகப் படித்து விடை எழுதியதுடன் சந்தேகங்களைப் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டு கல்வி கற்று இந்த சாதனையினை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் தான் ஒரு சிறந்த சட்டத்தரணியாக வந்து கிராமத்தில் பணி செய்ய வேண்டும் என்றும் நிதர்சனா தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
குறித்த மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவ முன்வரவேண்டுமென நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.