பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெறும் நடைமுறைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
விவரங்களைக் கோரி ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெறும்போது பொலிஸார் பின்பற்றும் நடைமுறைகள் குறித்தே இந்த அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மா அதிபருக்கு விளக்கம் கோரிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் நிலைமைகளை ஆணைக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இதன்போது பல கைதிகள் தம்மிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படும்போது அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக முறையிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கைதிகளின் கையொப்பங்களை பெறுவதற்காக முன்கூட்டியே சிங்கள மொழியில் மாத்திரம் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
$ads={2}
அந்த வாக்குமூல அறிக்கைகளில் கையொப்பமிடப்பட்டால் விடுவிப்பதற்கான வாக்குறுதிகளும், மாறாக கையெழுத்திடப்பட மறுத்தால் பொய்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகளை சுமத்தப்போவதாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு பொறுப்பான ஆணையாளர் ரமணி முத்தட்டுவேகம கடித்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஒப்புதல் வாக்குமூலம் என்பது தன்னார்வத்தின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டதாகும் என்றும் ரமணி முத்தட்டுவேகம தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஏற்கனவே ஆணைக்குழு பொலிஸாருடன் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் பொலிஸாரால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் தொடர்பாக தெரியப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.