எனது அன்புள்ளம் மிக்க இந்து, தமிழ் சகோதரர்களுக்கு,
தீபத் திருநாள் நல் வாழ்த்துக்களை உளப்பூர்வமாகத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமாகிய மொஹமட் உவைஸ் மொஹமட் தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தீபாவளி ஐக்கியத்துடனும், ஆரோக்கியத்துடனும், பொறுமையாகவும் வாழ்வது நம் அனைவரினதும் பொறுப்பு என்பதை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தீமை தோற்கடிக்கப்பட்டு நன்மை வெற்றி பெறுவதனை அடையாளப்படுத்தி உலக வாழ் இந்து, தமிழ் பக்தர்கள் இன்றைய தினம் தீபங்களை ஏற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்து தமிழ் மக்கள், கடவுள் மீது கொண்ட தீராத பக்தியுடன் இன்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுகின்றார்கள். இன்றைய தினத்தில் புரியும் சமயக் கிரியைகள் ஊடாக தன்னுள் குடிகொண்டிருக்கும் மமதை, பேராசை, பொறாமை போன்ற தீய குணங்கள் கலைந்து, நற்பயனை அடைந்துகொள்ள முடியுமென்பது இந்து மத நம்பிக்கையாகும்.
இன்றைய சூழ்நிலை, கொரோனா வைரஸ் பரவல் தொற்றியுள்ள காலகட்டம் என்பதால், சுகாதாரத்துறை எமக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, கூட்டமாக ஒன்று சேர்ந்திருக்காது விலகியிருந்து தூய்மையைப் பேணி, வீட்டிலேயே தமது குடும்பத்தாரோடு அமைதியாக இப்பெருநாளைக் கொண்டாடுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன், எமது பொருளாதார ரீதியிலான எதிர்காலம், மிகவும் கடினமானதாக இருக்கும் என்பதால், அதை எதிர்கொள்வதற்காகவும், நாம் எம்மைத் தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலிலிருந்து விரைவில் எமது நாட்டுக்கு வசந்தம் வரவேண்டும். நாம் அனைவரும் அதற்காக இந்நன்நாளில் முயற்சிக்க வேண்டும்.
அறியாமை எனும் இருளை அகற்றி ஒற்றுமை, அர்ப்பணிப்பு ஆகிய உணர்வுகளை அதிகரித்து, எமது தாய் நாட்டை உயர் ஸ்தானத்துக்குக் கொண்டு செல்லும் சிறந்த நன்நோக்கில் இன்றைய திருநாளில் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அத்துடன், இந்தத் தீபத் திருநாளில் முழு உலகையும் ஆட்கொண்டிருக்கும் கொடிய வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கை வாழ் அனைத்து இன மக்களும் முழுமையாகவே விடுதலைபெற்று, எல்லோரும் மீண்டும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க இறைவனின் அன்பும் அருளும் ஆசியும் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.
-ஐ. ஏ. காதிர் கான்