ராஜபக்ஷ சகோதரர்ளை சூழவுள்ள நண்பர்கள், வியாபாரிகள் மற்றும் அரசியல் வாதிகளுக்காக எழுதப்பட்ட பாதீடே இது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்துள்ளார்.
இன்று (20) இடம்பெற்ற வரவு செலவு திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
"இலங்கை வரலாற்றில் அதிக முறை பாதீட்டை சமர்ப்பித்த பெருமைக்குரியவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான விவாதத்தில் உரையாற்ற கிடைத்தது மகிழ்ச்சி.
$ads={2}
இந்த அரசு ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ”சேர் ஃபைல்” என்று இன்று மக்கள் உணர்ந்துள்ளனர். அதேபோல் ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக மஹிந்த ராஜபக்ஷ சகோதரர்களால் நாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டின் மூலம் நாட்டின் கடன் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதனால் ”சேர் ஃபைல்” ஆக முன்னரே பிரதமர் ”ஃபைல்” இதனால் முழு நாடும், நாட்டு மக்களும் ”ஃபைல்”. இதோ எனது கையில் உள்ள இந்த பாதீடு ராஜபக்சக்களின் தலையில் கிரீடத்தை அணிவித்த 69 இலட்சம் மக்களுக்காக உருவாக்கப்பட்டதா ? இல்லை தம்மையும் தம்மை சூழவுள்ள நண்பர்கள், வியாபாரிகள், மற்றும் அரசியல் வாதிகளுக்காக எழுதப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவது பற்றி இதில் எதுவுமே இல்லை.
உலக பொருளாதாரமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதை மீட்டெடுக்க உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பாதீட்டில் கொரோனா பற்றி மிக சிறு பகுதி மட்டுமே குறிப்பிட்டுள்ளமை ஆச்சரியமாக உள்ளது.
இதில் இருந்து எவ்வாறு மீட்சி பெறுவது பற்றி குறிப்பிடாதது ஆச்சரியமாக உள்ளது. இதை தயாரித்தவர்கள் இலங்கையில் இருந்து இதை எழுதினார்களா அல்லது வேறு ஒரு உலகில் இருந்து எழுதினார்களா என தெரியவில்லை.
வீட்டு வாடகை செலுத்த, தண்ணீர், மின்சாரம் கட்டணம் செலுத்த, மருந்து வாங்க பணம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கான நிவாரணம் பற்றி இதில் என்ன கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று கூறியுள்ளார்கள் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவது பற்றி.
நாட்டை கட்டியெழுப்ப எங்கிருந்து எவ்வாறு பணம் கொண்டுவர வேண்டும் என தமக்கு தெரியும் என ”வியத்மக” அமைப்பினர் கூறினர். ஆனால் வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றும் முறை பற்றியே அவர்கள் கூறினார் என்பது இப்பொழுது தான் தெரிகிறது.
யாரின் தேவைக்காக கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்ற முயற்சிக்கின்றனர். நாட்டை கட்டியெழுப்பவா? மக்களுக்கு நிவாரணம் வழங்கவா? இல்லை. அரசை ஆட்சிக்கு கொண்டு வந்த தமது நண்பர்களினதும், அரசியல்வாதிகளினதும் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இங்கு கொண்டுவரவா முயற்சி செய்கின்றனர்.
இதோ இந்த பாதீட்டை வாசித்து பாருங்கள் இதில் எங்காவது அரசின் வருமானம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதா?
இலங்கை வரலாற்றில் அதிக பணம் அச்சடித்த வருடம். நாட்டின் வருமானம் குறைந்த வருடம். ஆனால் நாட்டின் வருமானம் வரும் முறைகள் பற்றி எந்த தகவலும் இதில் இல்லை." என்றும் தெரிவித்துள்ளார்.