இன்றைய தினம் (23) தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்காக நாடு பூராகவும் உள்ள 5,100 பாடசாலைகளில் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளே இவ்வாறு மீள திறக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் காணப்படும் 10,165 பாடசாலைகளில் மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் 5 ,233 பாடசாலைகள் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நாட்டில் தற்போது நிலவும் அவதான நிலைமையின் அடிப்படையில், கிழக்கு மாகாணத்தின் 05 பாடசாலைகள் மற்றும், குருணாகலை மாவட்டத்தின் சில பாடசாலைகள், சப்ரகமுவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள சில பாடசாலைகள் ஆகியன திறக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்காக 5,100 பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றைய தினம் முதல் ஆரம்பமாகவுள்ளன.
சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கு அமைவாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 15/2020 இலக்க சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல் கையேடு ஆகியன அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இதனை பின்பற்றி மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் அடிப்படையில் பாடசாலைகளை மீண்டும் திறக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், மாணவர்களுக்காகவும், தவறவிடப்பட்ட அவர்களது கல்வியை மீட்டெடுப்பதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமே இது என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.
மேலும், ஆரம்ப வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை அரம்பிப்பது குறித்து எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக, ஒவ்வொரு பாடசாலைகளினதும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்காக 105.812 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, 100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ரூபாவும், 200 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளுக்கு 10 ஆயிரம் ரூபாவும், 200 மாணவர்களுக்கு அதிகமான பாடசாலைகளுக்கு 12 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.