பழைய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடத்திட்டம் என பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு குழுக்களைத் தேர்ந்தெடுப்பதில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று (03) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பாடத்திட்ட மாற்றம் காரணமாக 2019 இல் முதன்முறையாக க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய (புதிய பாடத்திட்ட) மாணவர்கள் கடுமையான அநீதியை சந்திக்க நேரிட்டுள்ளதாக அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. உதாரணமாக, குறுநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாவது தடவை தோற்றிய 98 மாணவர்களும், முதல் முறை தோற்றிய 43 மாணவர்களும் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
முதன்முறையாக க.பொ.த உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றி அதிக புள்ளிகள் பெறும் மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் இரண்டாவது முறையாக க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க மாட்டார்கள். வேறு எந்த பாடநெறிகளுக்கும் விண்ணப்பிக்க மாட்டார்கள் என அவர் விளக்கினார்.
குறுநாகல் மாவட்டத்தில் இம்முறை முதலாம் தடவை தோற்றிய ஒருவர் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 37 ஆவது இடத்தைப் பெற்ற மாணவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக உயர்ந்த வாய்ப்புக்கள் இருந்தாலும் அரச பல்கலைக்கழக பிரவேசத்தை எதிர்பார்த்து அவ்வாறு கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு செல்லமாட்டார். அத்தோடு, இரண்டாவது தடவையும் பரீட்சைக்குத் தோற்ற விண்ணப்பிக்க மாட்டார். எனினும் முதல் தடவை எழுதும் 43 பேர் மாத்திரமே உள்ளீர்க்கப்படுவர்.
சில மாணவர்கள் அதிக இஸட் புள்ளிகள் பெற்றதால் மருத்துவ பீடங்களுக்கு மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால், அந்தக் மாணவர்கள் கடும் மனச் சோர்வடைந்துள்ளனர்; எந்தப் பாடநெறியிலும் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
முதல் தடவை தோற்றியவர்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பது இங்கே தெளிவாகிறது. எனது கிராமம் என்பதால், இதற்கு என தலையீடு தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு கல்வி அமைச்சர் பதிலளித்துப் பேசுகையில், இது தொடர்பாக 2012 இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பையும் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது. அதனடிப்படையிலேயே இம்முறை நடைமுறைப் பின்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரப்படும் என கல்வி அமைச்சர் விளக்கமளித்தார்.
நன்றி: teachmore