அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 69 சதவீத அமெரிக்க முஸ்லிகள் ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தேர்தலுக்கு பிந்தய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த முறை அதிபர் தேர்தலில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தேர்தலுக்கு முன்னரே சுமார் 10 கோடி மக்கள் வாக்களித்தனர்.
மேலும் தேர்தல் நாளான நேற்று அதிகமான வாக்காளார்கள் வாக்களித்துள்ளனர். இதில் இரண்டு கட்சிகளும் தாங்கள் எதிர்பார்த்த இடங்களை கனிசமாக கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அடுத்த ஜனாதிபதி யார் என்பதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பெரும்பாலான அமெரிக்க முஸ்லிம்கள் எதிர்கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கே வாக்களித்துள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க இஸ்லாமிய கவுன்சில் நடத்திய ஆய்வில், இந்த முறை அமெரிக்காவில் உள்ள 84 சதவீத இஸ்லாமிய குடும்ப வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
அதில் 69 சதவீதம் எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் 17 சதவீதம் டொனால்ட் ட்ரம்புக்கும் வாக்களித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சிறுபாண்மையின வாக்குகள் குடியரசு கட்சிக்கு பெருவாரியாக வராததுக்கு காரணம் நாட்டில் சிறுபாண்மையினருக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலே என கருதப்படுகிறது.
இருப்பினும் இம்முறை கடந்த தேர்தலை காட்டிலும் இந்த தேர்தலில் அமெரிக்க இஸ்லாமியர்களின் வாக்குகளை ட்ரம்ப் கவர்ந்துள்ளார் என கூறலாம்.
ஏனெனில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 13 சதவீத இஸ்லாமிய வாக்குகளை மட்டுமே பெற்ற ட்ரம்ப் இந்த முறை 17 சதவீத வாக்குகளை பெற்று முன்னேறியுள்ளார்.