முழுமையான விபரம் இதோ - 13 ஆயிரத்தை கடந்து செல்லும் கொரோனா தொற்று!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முழுமையான விபரம் இதோ - 13 ஆயிரத்தை கடந்து செல்லும் கொரோனா தொற்று!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சனிக்கிழமை (07) இரவு 10 மணிவரை 445 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இவர்களில் நான்கு பேர் வெளிநாடுகளின் இருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். ஏனைய அனைவரும் மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர்.

அதற்கமைய மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 9,933 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 419 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் இன்று கொரோனா தொற்று காரணமாக நான்கு மரணங்கள் பதிவாகியதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.


$ads={2}

இந்நிலையில் வெலிக்கடை சிறைச்சாலையை அடுத்து இன்றைய தினம் கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடி கிளையொன்றின் ஊழியர்கள் இருவருக்கும் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நான்கு மரணங்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் இன்று நால்வர் மரணமடைந்திருந்தனர்.

கொழும்பு 10, மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயது மற்றும் 69 வயதுடைய இரு பெண்களும், வெல்லம்பிட்ய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது ஆண் ஒருவரும், கனேமுல்லை பகுதியை சேர்ந்த 88 வயது பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு 10, மாளிகாவத்தையை சேர்ந்த 42 வயது பெண் தனது வீட்டிலேயே மரணமடைந்திருந்தார். கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு இவரது மரணத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு 10, மாளிகாவத்தையை சேர்ந்த 69 வயது பெண் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு இருந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சலினால் மரணமடைந்துள்ளார்.

வெல்லம்பிட்டியை சேர்ந்த 67 வயது ஆண் நீண்டகாலமாக நோய்வாய்பட்டு இருந்துள்ளதுடன் சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா காச்சல் காரணமாக அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.

$ads={2}
மினுவாங்கொடை கொரோனா தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணியவரென அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த கனேமுல்லையை சேர்ந்த 88 வயது பெண் சுகயீனம் காரணமாக பல்லேகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அங்கொடை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் மற்றும் குருதி நஞ்சாகியமை காரணமாக மரணமடைந்துள்ளார்.

யூனியன் பிளேசில் பல்பொருள் அங்காடி ஊழியர்களுக்கு தொற்று

கொழும்பு – யூனியன் பிளேசில் அமைந்துள்ள தனியார் பல்பொருள் அங்காடி கிளையொன்றின் ஊழியர்கள் இருவருக்கு சனிக்கிழமை தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பல்பொருள் அங்காடி அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த இரு ஊழியர்களுடன் தொடர்புகளைப் பேணிய ஏனைய ஊழியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் , கிருமி நீக்கல் நடவடிக்கைகளுக்காக குறித்த தனியார் பல்பொருள் அங்காடியின் கிளை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய போகம்பரை சிறைச்சாலையிலும் தொற்று

கண்டி பழைய போகம்பரை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 7 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துசார உப்புல்தெனிய தெரிவித்துள்ளார்.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் வெலிகந்தை பிரதேசத்தில் அமைந்துள்ள கொவிட் சிகிச்சைக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறையில் 300 பேருக்கு பி.சி.ஆர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை 30 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து அங்கு 300 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் யாருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹாவில் குறைவடையாத தொற்றாளர்களின் எண்ணிக்கை

$ads={2}
மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலையில் முதலாவது தொற்றாளர் இனங்காணப்பட்டதன் பின்னர் அம்மாவட்டத்தில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுகின்றனர். வியாழக்கிழமையும் இங்கு 203 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். சனிக்கிழமை மாலை நான்கு மணிவரையான காலப்பகுதியில் 201 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இதே வேளை கொழும்பில் 101 , கொழும்பு மாநகரசபையில் 2, களுத்துறையில் 13, குருணாகலில் 13, கேகாலையில் 18, காலியில் 3, இரத்தினபுரி மற்றும் பதுளையில் தலா 2 , கண்டி, மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, வவுனியா, அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் புதிய தொற்றாளர்கள்

ஹொரணை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

5600 க்கும் மேற்பட்டோர் பணியாற்றும் ஹொரணை, குருகொட ஆடைத் தொழிற்சாலையில் இதுவரை 159 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் 2,000 க்கும் மேற்பட்ட பி.சி.ஆர். சோதனைகளின் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஹொரணை நிர்வாக பொது சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.