நாட்டில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், கடந்த 07.11.2020 ஆம் திகதியிலிருந்து ஏனைய மாகாணங்களில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தவர்கள் அனைவரும் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இந்தத் திகதியின் பின்னர் வருகை தந்தோரை வீட்டில் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த பிரதேசங்களின் நோய் நிலைமைகளின் அபாய நிலையை பொறுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் தீர்மானிப்பர்.
இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதாரப் பரிசோதகர், குடும்ப நல உத்தியோகத்தர் அல்லது வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்பிலுள்ள 021-2226666 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு உங்களது விபரங்களை அறியத்தர வேண்டும்.
இதன் மூலம் தங்களையும் சமூகத்தையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை எம்மால் வழங்க முடியும்.
இந்த நோய் எமது மாகாணத்தில் பரவாதிருக்க எமக்கு தகவல்களை வழங்கி ஒத்துழைப்பு வழங்கவும்." என தெரிவித்தார்.