இந்த விடயத்தை காணொலி தொழில்நுட்பம் மூலம் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் ரெட்ரொஸ் அதனோம் தெரிவித்தவை வருமாறு:
"கொரோனா தொற்றுக்கு எதிராக பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு சக்தியைப் பெற்று விட்டால் அவர்கள் சமூக நோய் தடுப்பாற்றல் (herd immunity) பெற்றவர்களாகக் கருதப்படுவர். முன்னர் தட் டம்மை நோய் பரவியபோது, ஒரு சமுதாயத்தில் 95 சதவீதத்தினர் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட்டால் மிகுதி ஐந்து சதவீதத்தினருக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும் என்று கணிக்கப்பட்டது.
இதேபோல், 80 வீதத்தினருக்கு போலியோ தீ நுண்மிக்கு எதிரான ஆற்றல் கிடைத்துவிட்டால், எஞ்சிய 20 சதவீதத்தினருக்கு அந்த நோய் பரவும் வாய்ப்பு தவிர்க்கப்படும் என்றும் கணிப்பிடப்பட்டது. ஆனால், பொதுமக்களை தீ நுண்மிகளிடமிருந்து பாதுகாப்பதன் மூலம்தான் இத்தகைய சமூக நோய்த் தடுப்பாற்றல் நிலை எட்டப்பட்டது.
$ads={2}
வேண்டுமென்றே தீ நுண்மியை பொதுமக்களிடம் பரப்பி, அவர்களிடம் இயற்கையாகத் தோன்றும் எதிர்ப்பாற்றல் மூலம் இதுவரை சமூக நோய்த் தடுப்பாற்றல் அடையப்படவில்லை.
கொரோனா நோய்த்தொற்று போன்ற கொள்ளை நோய்களுக்கு மட்டுமல்ல, மற்ற எந்தவொரு பரவல் நோய்க்கும் அந்த உத்தி பயன்படுத்தப்பட்டதில்லை. இயற்கை முறையில் சமூக நோய்த்தடுப்பு நிலையை அடைவது அறிவியல் ரீதியில் பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது.
உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய, நாம் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாத தீ நுண்மியை பொதுமக்களிடையே வேண்டுமென்றே பரவச் செய்வது ஆபத்தானது மட்டுமின்றி, அறத்துக்கும் எதிரானது. எனவே, கொரோனாவைப் பரப்பி, இயற்கையான முறையில் அந்த நோய்க்கு எதிரான ஆற்றலைப் பெறும் யோசனை ஏற்கத்தக்கதல்ல” என்று அவர் கூறினார்.