முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது தொலைகாணொளி மூலம் வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, புத்தளத்தில் இருந்து மன்னார் வரையில் இடம்பெயர்ந்த வாக்காளர்களை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஏற்றிச் சென்றதன் மூலம், பொதுச் சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை முதலான குற்றச்சாட்டுக்கள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட 3 பேர் மீது முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனை வாகனத்தில் ஏற்றி சென்று தலைமறைவாக வைத்திருந்த குற்றச்சாட்டில் அவரது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.