ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் காலி அத்-தக்வா பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் உட்பட பொருளாளர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
பின்னர் பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் மௌலவி எம்.ஜே.எம். அதாவுல்லா மற்றும் பொருளாளர் எம்.எஸ்.எம். ரிசாத் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் நிரபராதி என நிரூபிக்கப்பட்டு முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
$ads={2}
இது தொடர்பான வழக்கு விசாரணை காலி நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சட்டமா அதிபரின் நிலைப்பாடு மற்றும் அது தொடர்பிலான ஆலோசனை அடங்கிய அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த காலி நீதிவான் ஹர்ஷன கெக்குனுவெல்ல சந்தேக நபர்களை, அவர்களுக்கு எதிராக சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்வதாக அறிவித்தார்.