உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் பொருள்களுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. அந்தப் பொருள்களின் தரத்தின் காரணமாகவே மக்களிடம் சாம்சாங்குக்கு அத்தனை மதிப்பு இருந்துவருகிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் லீ குன் ஹீ. அதுவரையில் மேற்குலக நாடுகள், குறைந்த விலையில் தொலைக்காட்சியை விற்பனை செய்யும் நிறுவனமாகத் தான் சாம்சங்கைப் பார்த்தார்கள். லீ குன் இடைவிடாது முயற்சி செய்து சாம்சங்கை தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்த்தெடுத்தார்.
1990-களில் சாம்சங் நிறுவனம் மெமரி சிப் உருவாக் ஜப்பான், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களைத் தாண்டி வளர்ந்தது. 2000-களில் செல்போன் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவாகியது. தென்கொரியாவின் பொருளாதாரத்தில் சாம்சங் எலக்ரானிக்ஸ் முக்கிய நிறுவனமாக உள்ளது. உலக அளவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அதிக பணம் செலவிடும் நிறுவனமாகவும் உள்ளது. 1987-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டுவரை சாம்சங் குழுமத்தின் தலைவராக இருந்தார். 1998 முதல் 2008-ம் ஆண்டுவரை சாம்சங் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தார்.
2008-ம் ஆண்டு முதல் அவருடைய இறப்புவரை சாம்சங் எலக்ரானிக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1996-ம் ஆண்டு நாட்டின் அதிபருக்கு லஞ்சம் கொடுத்தார் என்று குற்றம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர் மன்னிக்கவும் பட்டார். அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், அவர் மீதான வரி ஏய்ப்பு குற்றமும் உறுதி செய்யப்பட்டது.
1990-களில் அவர், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பிருந்து மீண்டிருந்தார். 2014-ம் ஆண்டு நெஞ்சுவலி காரணமாக அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அதன்பின்னர், தொடர் சிகிச்சைப் பெற்றுவந்தார். அதன் பின் முழு பொறுப்பையும் அவரது மகன் கவனித்து வந்தார். இந்தநிலையில், இன்று காலையில் லீ குன் உயிரிழந்ததாக சாம்சங் குழுமம் அறிவித்துள்ளது. இருப்பினும், அவருடைய இறப்புக்கான காரணம் விளக்கப்படவில்லை.