இலங்கையின் 21 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மக்கள் செயற்படுவார்களாயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
அத்தோடு ஏனைய மாவட்டங்களை பொறுத்தவரையில் சில மாவட்டங்களில் ஒருவர் மாத்திரம் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
4 மாவட்டங்களில் இவ்வாறு ஒருவர் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 4 மாவட்டங்களில் இருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்கள், பிரென்டிக்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் நாட்டை முடக்கும் நிலை உருவாகவில்லை என சுகாதார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கடந்த 6 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு நகரிற்குள் 2 ஆயிரத்து 884 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதாக வைத்தியர் ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.
அத்தோடு கொழும்பில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் இன்றைய தினம் புதன்கிழமை இந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு மெகசின், விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை தலைமையகத்தின் அதிகாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 38 ஆக அதிகரித்ததுள்ளது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 3 ஆயிரத்து 328 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆயிரத்து 697 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இலங்கையில் இதுவரை 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.