20ஐ நிறைவேற்றிக்கொள்ள ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்களின் நடவடிக்கையை கருத்திற்கொண்டேனும் கொரோனா தொற்றில் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (23) கொரோனா சுகாதார நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று தொடர்பில் உலக சுகாதார அமைப்பு விடுத்திருக்கும் வழிகாட்டலின் அடிப்படையிலே செயற்படுவதாகவும் அதனை மீறி செயற்படுவதில்லை எனவும் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகமும் தெரிவித்திருந்தனர். உலக சுகாதார அமைப்பு கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தி இருந்த சுகாதார வழிகாட்டலே தற்போதும் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
$ads={2}
அத்துடன் குறிப்பாக கொரோனா தொற்று காரணமாக மரணிப்பவர்களை அடக்கவும் முடியும் தகனம் செய்யவும் முடியும் என உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எமது நாட்டில் ஒருவர் மரணித்தால் அந்த சடலத்தை அவர்கள் பின்பற்றும் கலாசாரத்தின் பிரகாரம் அடக்குவார்கள் அல்லது எரிப்பார்கள்.
ஆனால் கொரோனாவில் மரணிப்பவர்களை அடக்கவும் எரிப்பதற்கும் இந்தியா போன்ற நாடுகளில் கடைப்பிடித்து வருகின்றன. எமது நாட்டில் இந்த பிரச்சினை வந்தபோது முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் தகனம் செய்ய மாத்திரமே இடமளிப்பதாக தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்றில் மரணிப்பவரை அடக்கம் செய்வதால் அந்த தொற்று மீண்டும் பரவுவதில்லை என தொற்று நோய் தொடர்பான வைத்திய நிபுணர் பபா பலிகவதன தெரிவிக்கின்றார். அவ்வாறு இருந்தும் அரசாங்கம் அரசியல் ரீதியிலான தீர்மானமாகவே தகனம் செய்ய தீர்மானம் எடுத்திருக்கின்றது.
தற்போதாவது, அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்பாகவேனும் சிந்தித்து, கொராரோனாவில் முஸ்லிம்கள் யாராவது மரணித்தால் அந்த சடலங்களை நல்லடக்கம் செய்ய சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்பதால், முஸ்லிம் உறுப்பினர்கள் 6பேரும் வாக்களித்ததால்தான் அரசாங்கத்துக்கு 20ஐ நிறைவேற்றிக்கொள்ள முடியுமாகியதை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.