வீட்டின் கூரையை கழற்றி உட் சென்று 16 வயதிற்கு குறைந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரங்கள் பகுதியில் சிறுமி உறக்க நிலையில் இருந்த வேளையில் அவரது வீட்டின் கூரையை கழற்றி வீட்டுக்குள் இறங்கி குறித்த வயோதிபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமாக்கி பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து DNA பரிசோதனை செய்தபோது பிறந்த பெண் குழந்தையின் தந்தை, சந்தேக நபரான சேகு மதார் தையூப் என DNA அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை இரசாயன பகுப்பாய்வாளர் நீதிமன்றில் ஆஜராகி நேரடியாக சாட்சியம் அளித்து சந்தேக நபர், அவர்தான் பிறந்த குழந்தைக்கு தந்தை என உறுதிப்படுத்தி சாட்சியமளித்துள்ளார்.
இந்நிலையில் 16 வயதிற்கு குறைந்த வயது சிறுமி நீதிமன்றில் சாட்சியமளித்த போது சந்தேக நபரான வயோதிபர் மன்றில் ஆஜராகி இருந்தார். அதன் பின்னர் தலைமறைவாகி விட்டார்.
$ads={2}
இதேவேளை குறித்த குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,200,000 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் அதனை வழங்காவிட்டால் 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அத்துடன் அரச செலவாக 75,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.