
மிரிஸ்ஸ பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய மேற்படி சிறுவன், சில வாரங்களுக்கு முன்பு மிரிஸ்ஸ மீன்வள துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, ஆகஸ்ட் 12 ஆம் திகதி கரைக்குத் திரும்பினார்.
வீடு திரும்பியதும் அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் குறித்து அவரது பெற்றோரிடம் விசாரித்தபோது, அந்த இளைஞன் தான் மீன்பிடி குழுவினரால் தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
சிறுவன் தற்போது மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதனையடுத்து அவரது பெற்றோர் அளித்த முறைப்பாடு மற்றும் சம்பவம் தொடர்பான ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், படகு உரிமையாளர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று (16) மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடற்றொழில் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் காஞ்சன விஜசேகர குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.