கொழும்பு, கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த சில தினங்களுக்கு முன் இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை அறையில் தனது மொபைலில் PUBG விளையாடிக் கொண்டிருந்த போது இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மரணம் தொடர்பில் திடீர் மரண பரிசோதகர் இரேஷா தேஷானி முன்னால் இடம்பெற்ற மரண பரிசோதனையின் போது அவரது 30 வயதுடைய மனைவி தர்ஷிகா என்பவரே இவ்வாறு சாட்சியளித்துள்ளார்.
தொடர்ந்து சாட்சியளித்தவர்,
எங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது, கணவர் வர்த்தகர், எனக்கு தெரிந்த அளவில் அவருக்கு அல்சர் வருத்தத்தை தவிர வேறு ஒரு நோயும் இல்லை.
இரவு 9 மணியளவில் தனது மொபைலில் விளையாடி கொண்டிருந்ததை நான் அவதானித்தேன். அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு நான் கூறினேன். அதை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரென சத்தம் ஒன்று கேட்டது. அங்கு சென்று பார்த்த போது மூக்கு, வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கணவர் விழுந்து கிடந்தார்.
உடனே அம்பியுலன்ஸ் வண்டிக்கு அழைப்பேற்படுத்தி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் அது வரையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
5 மணி நேரத்திற்கும் அதிகமாக தொலைபேசியில் விளையாடியமையினால் அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.