2017 தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரையான காலத்தில் அரச புலனாய்வு பிரிவில் முக்கிய பதவியில் இருந்த அதிகாரி ஒருவர் ஈஸ்டர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி அளிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கட்சி பிரச்சினையில் இருவருக்கிடையில் பிரச்சினை நடந்து கொண்டிருந்ததால் தேசிய பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு விடயத்தில் இவர்கள் கவனம் செலுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த வருடம் மார்ச் மாதம் இடம்பெற்ற தேசிய புலனாய்வு கலந்துரையாடலில் சஹரான் ஹாசிம் தொடர்பில் ஆராயா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு இருந்தபோதும் அப்போதைய தலைமைகள் நாட்டின் நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தியதாக புலனாய்வு பிரிவு அதிகாரி சாட்சி அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்ததாவது,
'புலனாய்வு பிரிவு மீளாய்வு கூட்டத்திம் இடம்பெற்ற இரண்டு சந்தர்ப்பங்களில் Activities of Mohomad Saharan என்ற தலைப்பில் சஹரான் குறித்து கலந்துரையாடப்பட இருந்த போதும் அது நடைபெறவில்லை. வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு தடவைகள் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கும் தகவல்களை பாதுகாப்பு செயலாளருக்கு முன்வைக்க சந்தர்ப்பம் கேட்டபோது அதுவும் கிடைக்கவில்லை.
அங்கு பிரச்சினை இருந்தது. நாம் புலனாய்வு தகவல்களை பாதுகாப்பு செயலாளருக்கு வழங்குமாறு புலனாய்வு பிரிவு பிரதானிக்கு அழுத்தம் கொடுத்தோம். அதனை அடுத்து புலனாய்வு பிரதானி ஆவணங்களுடன் பாதுகாப்பு செயலாளரை சந்திக்கச் சென்ற போதும் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அமெரிக்காவின் CIA நிறுவனம் கூட தேசிய புலனாய்வு பிரிவிற்கு தகவல் அளிக்கும். ஆனால் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஆளணி மற்றும் தொழிநுட்பம் எம்மிடம் இல்லை' என புலனாய்வு பிரிவு அதிகாரி சாட்சி அளித்துள்ளார்.