e-Land பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

e-Land பதிவை இலத்திரனியல் முறைமையில் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

காணி பதிவின்போது இடம்பெறும் மோசடிகளைத் தவிர்ப்பதற்கும் பதிவு பொறி முறைமையைத் துரிதப்படுத்துவதற்கும் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.

காணிப் பதிவின் போது இடம்பெறும் மோசடிகள் மற்றும் தாமதங்கள் காரணமாகப் பொதுமக்கள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

காணி ஆணையாளர் திணைக்களம், காணி உரித்துகள் நிர்ணய நிறுவனம், நில அளவைத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகத் திணைக்களம் ஒன்றிணைந்த வகையில் ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்யும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஈ – காணி (இலத்திரனியல் முறைமை) பதிவு செய்தல் நடவடிக்கை தொடர்பாக நேற்று 30 ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

காணிப் பதிவுசார் நிறுவனங்களை ஒன்றிணைப்பதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். வனஜீவராசிகள், வன பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சையும் ஒன்றிணைத்து குழுவொன்றை நியமித்து இவ்வேலைத்திட்டத்தைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.


ஈ – காணி (இலத்திரனில் முறைமை) பதிவின் ஊடாக உறுதிப்பத்திரம், காணி பொழிப்பு அறிக்கை கணினிமயப்படுத்தப்படும். பொழிப்பு அறிக்கை பெற்றுக்கொள்ளும்போது கணினிமயப்படுத்தப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கும் சட்டத்தரணிகளுக்கு, பத்திரத்துறை பதிவாளர்களுக்கு மற்றும் எந்தவொரு நபருக்கு அல்லது அரச நிறுவனத்திற்கு இணையவழி மூலம் காணி பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் காணி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்துடன் (ICTA) ஒன்றிணைந்து ஆகஸ்ட் மாதமளவில் இவ்வேலைத்திட்டத்தை மக்கள் மயப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறு ஈ – காணி (இலத்திரனில் முறைமை)யின் கீழ் பதிவு செய்யும் காணிகளுக்கு இலத்திரனியல் கணக்குப் புத்தகம் ஒன்றையும் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரணவக்க, பதிவாளர் நாயகம் என்.சி.வித்தான, காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சி.எம்.ஹேரத், காணி உரித்துகள் நிர்ணய ஆணையாளர் நாயகம் ஜி.எம்.எச்.பிரியதர் ஷனி, நில அளவையாளர் நாயகம் ஏ.எல்.எஸ்.சி. பெரேரா இலங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையத்தின் (ICTA) தலைவர் ஜயந்த த சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.