கொழும்பு - காலி முகத்திடலில் (Galle Face) ரஷ்ய நாட்டு பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படும் குழுவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (06) மாலை தன்னை ஒரு குழுவினர் துன்புறுத்தியதாக குறித்த ரஷ்ய நாட்டு பெண் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தின் காணொளியையும், பிரதான சந்தேகநபரின் புகைப்படத்தையும் குறித்த பெண் முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார்.
நேற்று மாலை காலி முகத்திடலில் தனது நண்பர்களுடன் நடந்துசென்ற போது, 10 பேர் கொண்ட குழுவினர் தன்னை துன்புறுத்தியதாக அந்த பெண் கூறியுள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர்கள் ஆபசமான முறையில் பேசியதாகவும், தடுக்க வந்த தனது நண்பரை தாக்கியதாகவும் அந்த பெண் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.