சமகால அரசாங்கத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு எவ்வித சலுகையும் கிடைக்கவில்லை. பொதுத் தேர்தலின் பின்னர் நாம் அமைக்கும் அரசாங்கத்தில் மின்சாரம், நீர் கட்டங்கள் மற்றும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தின் கீழ் கடன்களை பெற்றுக் கொண்டவர்களுக்கு அவற்றை செலுத்த ஓராண்டு சலுகைக்காலம் வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் எம்மிடமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அவிசாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
நாட்டின் முச்சக்கரவண்டி பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சிக்கண்டுள்ளது. சுயத்தொழில் வீழ்ச்சிக்கண்டுள்ளது. சுற்றுலாத்துறையில் வருமானத்தை பெற்றுவந்தவர்களின் வருமானமும் வீழ்ச்சிக்கண்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே மக்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் நீர் கட்டணத்தை செலுத்த முடியாது நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளவர்கள் முதல் மாதத்திற்குரிய கட்டணத்தை மாத்திரம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அரசாங்கத்தில் எரிபொருள் விலை வீழ்ச்சியின் மானியத்தை மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம். அதுமட்டுமல்ல என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டத்தின் கீழ் 5 கோடிக்கும் குறைவான கடனைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஒருவருட சலுகைக் காலத்தையும் வழங்கவுள்ளோம் என்றார்.