
அங்கொட லொக்காவின் வீட்டுக்கு இன்றைய தினம் சென்றிருந்த செய்தியாளர் வினவிய போதே அவரது தந்தை இதனை தெரிவித்தார்.
திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சந்தன பெரேரா கொலை செய்யப்பட்டுள்ளதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொடர்ந்தும் விடயங்களை ஆராய்ந்து வருவதாக சென்னையில் உள்ள துணை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் அங்கொட லொக்கா கொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியிடப்படும் தகவலானது அவர் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு நாட்டுக்கு வருகை தருவதற்கான முயற்சியா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் பெங்களுரில் வைத்து அங்கொட லொக்காவுக்கு விஷம் செலுத்தப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பல குற்றச் செயல்கள் தொடர்பில் அவருக்கு எதிராக நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் பரவி வருகின்ற நிலையில், அதனை உறுதிப்படுத்தக்கூடிய வகையிலான தகவல்கள் இலங்கை காவல்துறைக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

