இலங்கை முழுவதும் கொரோனா தொற்று தீவிரவாக பரவிவிட்டதாக கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கம் தேர்தலை இலக்காகக் கொண்டு உண்மைத் தகவல்களை மறைத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
$ads={1}
கொழும்பு IDH வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்து போலியான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக விமர்சனம் வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, தேர்தல் பிரசாரங்களை ஏன் அரசாங்கம் நிறுத்தியது என்றும் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கண்டி மாவட்ட வேட்பாளருமான லக்ஸ்மன் கிரியெல்ல, கண்டியிலுள்ள தனது இல்லத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.
இதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை முழுவதிலும் கொரோனா தொற்று பரவிவிட்டதாகவும், நாடு இருளடைவதற்கு முன் தடுப்பு நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் “ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தமது தேர்தல் பிரசாரக் கூட்டங்களை மறுஅறிவித்தல் வரை மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனூடாக அரசாங்கம் தேர்தல் போட்டியிலிருந்து விலகிவிட்டதா என கேட்கின்றேன். பிரசாரப் பணிகளை அரசாங்கம் நிறுத்தியதற்கான உண்மையான காரணம் என்ன? இதனை அரசாங்கமே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். மக்களுக்கு உண்மையை மறைக்க வேண்டாம்.
கொரோனா விவகாரம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. இருப்பினும் அவை உண்மைதான் என்றும், கொரோனா வைரஸ் பரவாமலிருப்பது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்தது.
இந்த புள்ளிவிபரம் பிழை என்றோம். அராங்கம் எதிர்பார்த்த அளவுக்கு இன்று கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் சமூகத்திலும் பரவிவிட்டது. கொரோனா வைரஸ் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு இன்றி எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.
ஆகவே வெறும் 03 நாட்களுக்கு பிரசாரங்களை அரசாங்கம் நிறுத்தியது ஏன்? நாட்டை மேலும் இருளில் பயணிக்க இடமளிக்க முடியாது. கொழும்பு தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்தியசாலையான IDH வைத்தியசாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கொரோனா வைரஸ் நோயாளர்களின் அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் ஆனால் அரசாங்கம் அவற்றை நிராகரித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக அரசாங்கம் உண்மைத் தகவல்களை மறைக்கின்றது. எதிர்வரும் நாட்களில் PCR பரிசோதனைகளை நடத்தமாட்டோம் என்றும் IDH வைத்தியசாலை அறிவித்துவிட்டது.
விமான நிலையத்தை மூடும்படி சஜித் பிரேமதாஸ தெரிவித்த போதிலும் கொரோனா தொற்று இங்கு இல்லை என தேர்தலை நினைவில் வைத்துக்கொண்டு அரசாங்கம் கூறியது.
ஆனால் வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் விமான நிலையத்தை அரசாங்கம் மூடியது. பின்னர் ஒவ்வொரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இன்று அதே நிலைமையா உருவெடுத்துள்ளது என்பதை அரசாங்கத்திடம் வினவுகின்றோம். கொரோனா தொற்று முடிந்துவிட்டது என்று சுகாதார அமைச்சு அறிவித்த நிலையிலும் மீண்டும் தொற்று பரவிவருகிறது என்பதே நிதர்சனம்!” என்று தெரிவித்திருந்தார்.