கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகளை நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் எவருக்கும் தற்போதைய நிலையில் சிறப்பு சலுகை வழங்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெற்ற மக்களாணையினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது பிரதான பொறுப்பாக உள்ளது. புதிய பாராளுமன்றம் தோற்றம் பெற்றால் மாத்திரமே தற்போது தோன்றியுள்ள அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்கான திகதி குறித்தொதுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் பொதுத்தேர்தலை தேர்தல் ஆணைக்குழு திகதி அறிவிக்காமல் பிற்போட்டது. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் செயற்பட வேண்டும். என பல்வேறு தரப்பினரால் குறிப்பிடப்பட்டது.
பாராளுமன்றம் கலைக்கபட்டதறகும், பொதுத்தேர்தலை ஜூன் மாதம் 20ம் திகதி நடத்துவதற்கு எதிராகவும் எதிர் தரப்பினர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்கள். நீதிமன்றம் மக்களின் ஜனநாயக உரிமையினை பாதுகாக்கும் பொருட்டு தாக்கல் செய்த மனுக்கலை இரத்து செய்தது.சுகாதார தரப்பின் அறிவுறுத்தல்களுக்கு அமைய கடுமையான பாதுகாக்குக்கு மத்தியில் பொதுத்தேர்தலை நடத்துவது அரசாங்கத்தில் நோக்கமாகும்.
பாராளுமன்றம் மீயுயர் அதிகாரமுடையது. ஜனாதியுடன் இணைந்து செயற்படும் நிலையான அரசாங்கம் பாராளுமன்றத்தில் தோற்றம் பெற வேண்டும். தேர்தல் ஆணைக்குழு பொதுத்தேர்தலை நடத்தும் திகதியையும், வேட்பாளர்களின் விருப்பு இலக்கத்தையும் உடனடியாக வெளியிட வேண்டும். தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள பொதுத்தேர்தலை தொடர்ந்து பிற்போடுவதாக அமைய கூடாது.
விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை நிராகரித்த அமெரிக்க இராஜதந்திரி தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படுகின்றன. அரசாங்கம் அமெரிக்காவிற்கு சிறப்பு சலுகையினை வழங்க வேண்டிய தேவை கிடையாது. வியன்னா ஒப்பந்தம் பிரகாரம் அந்த அமெரிக்க இராஜதந்திரி பி.சி.ஆர் பரிசோதனையை புறக்கணித்தாக குறிப்பிடப்படுகின்றது. எவ்வாறாயினும் அது தவறான செயற்பாடு என அரசாங்கம் குறிப்பிட்டது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், மற்றும் தூதுவர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் என இலங்கையில் உள்ள அனைத்து தூதுவராலயங்களுக்கும் விசேட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. ஒரு சில வெளிநாட்டு பிரதிநிதிகள், தூதுவர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டார்கள்.
கொரோனா வைரஸ் பரவைலை அரசாங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது செயற்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மாத்திரம் விதிவிலக்கல்ல. அரசாங்கம் எத்தரப்பினருக்கும் சிறப்பு சலுகை வழங்காது.
-Virakesari