வடக்கு மற்றும் கிழக்க மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் கருணா அம்மான் குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது. இவருக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது என கைத்தொழில் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கைத்தொழில் முகாமைத்துவ அமைச்சில் இன்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யுத்த காலத்தில் இராணுவத்தினரை தான் கொன்றதாக குறிப்பிட்டு பெருமைப்பட்டுக் கொள்ளும் செயற்பாடு வெறுப்புக்குரியது. இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே கருணா அம்மான் தான் யுத்த காலத்தில் 3,000 இராணுவத்தினரைக் கொன்றதாக குறிப்பிட்டுள்ளார்.
யுத்த கால சம்பவங்களை மீள மீட்டுவது இரு தரப்பிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தும். விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து தான் பாவம் இழைத்துள்ளேன் என்றே கருணா அம்மான் வருத்தப்பட வேண்டும். இவ்வாறு இராணுவத்தினரை கொன்றதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசியல் இலாபம் தேடுவது தவறாக செயற்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.