குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட வைத்தியர் என். பரீட், ஆர்ப்பாட்ட அச்சுறுத்தல்களை தொடர்ந்து தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.
கடந்த 05ஆம் திகதி குருணாகல் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் என். பரீட் சுகாதார அமைச்சினால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
‘தாய்மார்களுக்கு நீதி வேண்டும்’ எனும் அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான இந்திரசிறி சேனாரத்ன இரு நாட்களுக்கு முன் (06) நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில், பெண்களுக்கு கருத்தரிப்பு தடை செய்ததாக, வைத்தியர் ஷாபிக்கு எதிராக இடம்பெற்று வரும் விசாரணை தொடர்பான ஆதாரங்களை மறைப்பதற்காக, குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வைத்தியர் ஷாபியுடனும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதீயுடனும், புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் பரீட் நெருக்கமானவர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நீக்கப்படா விட்டால், பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும், அவர் தெரிவித்திருந்தார்.
கொவிட்-19 அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில் வைத்தியசாலையை தயார்படுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு காரணமாக, குருணாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் சரத் வீரபண்டார சுகாதார அமைச்சினால் நீக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் என். பரீட், குருணாகல் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக ஒரு மாத காலத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிறுந்தமை குறிப்பிடத்தக்கது.