முன்னாள் அமைச்சர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற ஊடகவியலாளர் ஒருவருக்கும் அவருக்கு நெருக்கமான இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அன்று
(03) வெளியான செய்தியில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் எமது ஹட்டன் செய்தியாளராக கடமையாற்றுவதுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான இருமல் நிலை மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக டிக்கோயா சிகிச்சைப்பெற்றதுடன் சுவாச நோய்களுக்கான சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் குறித்த ஊடகவியலாளரும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அவருடன் வந்த இரு நெருங்கிய நண்பர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் தற்போது அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து நீக்கி வழமையான முறையில் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குறித்த எங்கள் செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
ஊடகவியலாளரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தியது அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அல்ல சுவாச பிரச்சனை காரணமாகவே என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளருக்கு கொரோனா தொற்று இல்லை என PCR பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.