அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்துக்கு ஹோமாகம மற்றும் கொழும்பு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிலளிப்பார்கள் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
பந்துல இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து பல தடவை விமர்சிக்கப்பட்டவர் என்றும், அவர் எப்பொழுதுமே ராஜபக்ஷக்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு தனது எண்ணத்தை நிறைவேற்ற முயற்சிப்பவர் என்றும் கூறினார்.
அவரது இல்லத்தில் நேற்று (31) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் பந்துல குணவர்தன காலத்திற்கு காலம் ஏதாவது கருத்தை தெரிவித்து பலர் மத்தியில் பெரும் விமர்சனங்களுக்குள்ளாகி வருபவர்.
அதற்கேற்ப தற்போது கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் பிச்சை எடுத்தாவது சர்வதேச விளையாட்டு அரங்கை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
அவர் ராஜபக்ஷக்களை மிக சூட்சுமுகமான முறையில் கையாண்டு அவரது கருத்துக்களை ஆதரவளிக்குமாறு அவர்களுடன் கலந்துரையாடியே அவரது திட்டத்தை செயற்படுத்த முயற்சிப்பவர்.
தாமரை மொட்டை காண்பித்து அவர்களை தன்வசப்படுத்திக் கொள்வார். ஆனால் இம்முறை கிரிக்கெட் வீரர் மஹேல ஜயவர்தனவின் விளக்கத்தினால் நாட்டு மக்கள் அனைவரும் இது தொடர்பில் தெளிவுற்றுள்ளனர். இதற்கு நாம் மஹேலவுக்கே நன்றி செலுத்த வேண்டும்.
நாட்டில் பல சர்வதேச விளையாட்டுரங்குகள் காணப்படுகின்றன. அவற்றை மேலும் அபிவிருத்தி செய்வதை விடுத்து புதிதாக ஒரு விளையாட்டு அரங்கை அமைப்பது என்பது இலகுவான செயற்பாடு கிடையாது.
இந்நிலையில் இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் , தொடர்ந்தும் விளையாட்டு அரங்கை அமைப்பதற்கு முயற்சிப்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் அவருக்கு பதில் அளிப்பார்கள். ஹோமாகம மக்கள் மாத்திரமல்ல கொழும்பு மக்களும் அவருக்கு உரிய பாடத்தை கற்பிப்பார்கள். என தெரிவித்திருந்தார்.