நேற்று (22) இரவு 7 மணியளவில் 17 பேருந்துகளில் குறித்த கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக 17 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் இராணுவ முகாமில் 174 கடற்படையினரும், வவுனியா பெரியகட்டு கடற்படை முகாமில் 102 கடற்படையினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த கடற்படையினரை அழைத்துச் சென்ற பேருந்துகளை வவுனியாவில் ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது கடற்படையினருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்ததுடன், பொலிசார் தலையிட்டு சமரப்படுத்தியிருந்தனர்.