ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்யில் ஈடுபட்டிருந்த போர்க் கப்பல் மீது தவறுதலாக இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 19 ஈரானிய கடற்படையினர் உயிரிழந்ததுடன், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாக ஈரானின் அரசு ஊடகங்கள் தொரிவித்துள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு மாலுமியும் அடங்குவார்.
ஓமான் வளைகுடாவில் உள்ள ஜாஸ்க் துறைமுகத்தின் கடற்பரப்பிலேயே இந்த அனர்த்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
ஓமான் வளைகுடாவில் இடம்பெற்ற ஒத்திகையின்போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.
ஒத்திகைக்காக பயன்படுத்திய இலக்கின் மீது ஜமரான் என்ற போர்க்கப்பல் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்ட போது, அந்த இலக்கிற்கு அருகில் நின்றிருந்த கொனராக் கப்பலை குறித்த ஏவுகணைகள் தாக்கியுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் போர்க் கப்பலில் எத்தனை குழு உறுப்பினர்கள் இருந்தார்கள் என்பது உடனடியாகத் தெரியவராத நிலையில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சம்பவத்தின் பின்னணிக்கான சூழ்நிலைகள் தற்போது தொழில்நுட்ப பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்கள் சபாஹாரில் உள்ள இமாம் அலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான கொனாரக் கப்பல் என்பது நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்டு 1979 இஸ்லாமிய புரட்சிக்கு முன்னர் ஈரானால் வாங்கப்பட்ட ஒரு ஹெண்டிஜன் வகுப்பு கப்பல் ஆகும்.
ஈரானிய கடற்படை அதன் பிரதான தலைமையகத்தை கடந்த நவம்பரில் தலைநகர் தெஹ்ரானில் இருந்து பாரசீக வளைகுடா கடற் பகுதியில் உள்ள துறைமுக நகரமான பண்டர் அப்பாஸுக்கு மாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.