
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த பாரம்பரிய போட்டியானது 1970முதல் நடைபெற்றுவருவதுடன் ஆங்கிலேய கிரிக்கெட்டின் அடுத்த பருவகாலத்துக்கான ஆரம்பப் போட்டியயை இலங்கையில் நடத்துவதற்கு மார்லிபோன் கிரிக்கெட் கழகம் தீர்மானித்துள்ளது.
இதற்கு அமைய மார்லிபோன் கிரிக்கெட் கழகத்துக்கும் இசெக்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கும் இடையிலான சம்பியன் கவுன்டி கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் அடுத்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
பிரித்தானியரல்லாத முதலாவது எம்.சி.சி. தலைவரும் இலங்கை யின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவருமான குமார் சங்கக்கார எம்.சி.சி. அணியின் தலைவராக விளையாடவுள்ளார்.
இலங்கை போன்ற நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டுத்துறைக்கு உதவுவது மிகவும் அவசியமானது எனவும் திறமைவாய்ந்த இளம் வீரர்களைக் கொண்ட எம்.சி.சி. அணிக்கு தலைமைதாங்க காத்திருப்பதாகவும் குமார் சங்கக்கார தெரிவித்தார்.
ஸ்பெக்சேவர்ஸ் கவுன்டி சம்பியன்ஷிப் போட்டியில் சம்பியனாகும் அணியுடன் நான்கு நாள் போட்டியில் எம். சி. சி. விளையாடுவதுண்டு. இப் போட்டி 2010 வரை லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலேயே நடைபெற்றவந்தது. அதன் பின்னர் இந்தப் போட்டி வெளிநாடுகளில் நடைபெற்றுவருகின்றது.
2011முதல் 2018வரை அபு தாபியில் நடைபெற்றுவந்ததுடன் இந்த வருடம் பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.
குறிப்பிட்ட சில காரணங்களுக்கான இப் போட்டி காலியில் அரங்கேற்றப்படவுள்ளது. எம்.சி.சி.யின் உலக கிரிக்கெட் குழுவின் கூட்டம் இலங்கையில் நடைபெறவுள்ள அதே காலப்பகுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் வல்லவர் தொடரில் இலங்கையை சந்திக்கவுள்ளது.
உள்நாட்டிலும் உலகளாவியரீதியிலும் டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் எம்.சி.சி.யின் உலக கிரிக்கெட் குழு கொண்டுள்ள அர்ப்பணிப்புத்தன்மைக்கு செம்பியன் கவுன்டி போட்டி முக்கிய பங்காற்றுவதாக எம்.சி.சி. கிரிக்கெட் குழுவின் தலைவர் ஜோன் ஸ்டீவன்சன் தெரிவித்தார்.
இலங்கையில் இப்போட்டியை நடத்த எம்.சி.சி. தீர்மானித்தமைக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்ம சில்வா நன்றி தெரிவித்தார்.
-மெட்ரோ