#peppermintcafe ஹாஷ் டேக் இலங்கையில் முதலிடம் பிடித்து ட்ரெண்டிங் ஆனது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

#peppermintcafe ஹாஷ் டேக் இலங்கையில் முதலிடம் பிடித்து ட்ரெண்டிங் ஆனது!

கொழும்பில் இயங்கும் தனியார் உணவகம் ஒன்றில் தமிழ் மொழியில் பேசக் கூடாது என்று ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

கொழும்பு 7 ஹொர்ட்டன் பிளேஸ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. குறித்த உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் மாத்திரமே உரையாட வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

உணவகத்தின் இந்த செயற்பாடு தொடர்பில் கண்டனங்கள் எழுந்ததுடன் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.

இது தொடர்பாக தங்கள் கருத்தினை வெளியிட்டிருந்த உணவகம்

“ எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இதை நாம் செய்தோம் . தமிழ் மொழியில் ஊழியர்கள் கதைக்கும் போது அது வாடிக்கையாளரை கிண்டல் செய்வது போல தாங்கள் உணர்வதாக கூறியுள்ளார்கள். இதனால் தான் இந்த அறிவிப்பை வைத்தோம் ” என்று விளக்கம் கொடுத்திருக்கிறது.


எனினும் இந்தச் செயற்பாட்டை வன்மையாகக் கண்டித்திருந்த இணையவாசிகள், இனவாதம் வெளிப்படுத்தும் அந்த தனியார் உணவகத்தை நிராகரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை சமூகவலைத்தளங்களில் பல சமூக ஆர்வலர்களால் முன்வைத்தனர்.

இந்நிலையில் சர்வதேச மட்டத்தில் உயர் பெறுபேறுகளைக்கொண்டிருந்த அந்த உணவகத்தின் நட்சத்திர நிலை திடீரென்று குறைவடைந்துள்ளது.

அந்த உணவகத்தில் தயாரிக்கப்படும்; உணவின் தரம், அந்த உணவகத்தில் காண்பிக்கப்படும் இனவாதம் போன்றன பற்றி இணையவாசிகள் மற்றும் அதனது வாடிக்கையாளர்கள் பதிவிட்டுவரும் எதிர்மறையான கருத்துக்களால், கூகிள், ரிப் அட்வைசர் உட்பட பல சர்வதேச தரவரிசைப்படுத்தல்களில் கீழ் மட்ட நிலைக்கு அந்த உணவகம் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை, தமிழ் நாடு, மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் ஆர்வலர்கள் மற்றும் இனவாதத்திற்கு எதிரானவர்களின் அதிரடியான செயற்பாடுகளால், அந்த உணவகத்தின் நிர்வாகிகள் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தற்பொழுது தள்ளப்பட்டிருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, டுவிட்டரில் இன்றைய ரென்டிங்கிலும் குறித்த உணவகத்தின் ஹேஷ் டாக் முதலிடத்திலிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தமிழ் மொழியை பேசக்கூடாது என உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.