
அடுத்த வருட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த 36 வயதான லசித் மாலிங்க, இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு தன்னிடம் இன்னும் இரண்டு வருடகளுக்கு விளையாடக்கூடிய திராணி இருப்பதாக கூறியுள்ளார்.
முன்னாள் தலைவர்களான ஏஞ்சலோ மெத்யூஸ், திசர பெரேரா ஆகிய இருவரும் இங்கு நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இருபது 20 தொடரில் இடம்பெறாத நிலையில் இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற மாலிங்க, அத் தொடரின் கடைசிப் போட்டியில் ஹெட் – ட்ரிக்குடன் நான்கு பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் புத்தெழுச்சி பெற்றவராகக் காணப்படுகின்றார்.
‘உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நான் தலைவராக செயற்படவேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் குறிப்பிட்டது. ஆனால், இலங்கையில் என்ன நேரும் என்பதை அனுமானிக்க முடியாது’ என்று மாலிங்க தெரிவித்துள்ளார்.
‘இருபது 20இல் நான்கு ஓவர்கள்தான் பந்துவீசவேண்டும். என்னிடம் உள்ள ஆற்றலை, சக்தியைக் கொண்டு இருபது 20 பந்துவீச்சாளராக என்னால் சமாளிக்க முடியும்.
அணித் தலைவராக உலகின் பல பாகங்களில் இருபது 20 போட்டிகளில் விளையாடியுள்ளேன். எனவே இன்னும் இரண்டு வருடங்களுக்கு என்னால் சமாளிக்க முடியும் என உணர்கின்றேன்’ என்றார் மாலிங்க.சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்களைப் பூர்த்திசெய்த ஒரே ஒரு வீரரான லசித் மாலிங்க, டெஸ்ட், சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபது 20 ஆகிய மூவகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த ஒரே ஒருவராகவும் திகழ்கின்றார்.
அது மட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபது 20 ஆகிய இருவகை கிரிக்கெட் போட்டிகளில் நான்கு பந்துகளில் 4 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்திய ஒரே ஒருவர் என்ற சாதனைக்கும் மாலிங்க உரித்தானவராவார்.
‘இலங்கை கிரிக்கெட்டில் ஆற்றல் மிக்க, விக்கெட்களை வீழ்த்தக்கூடிய வீரருக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. உடனடியாக ஒருவார் கிடைப்பார் என்று கூறமுடியாது. ஒரு வருடம், ஒன்றரை வருடம் ஆகலாம். விக்கெட்களை வீழ்த்துவதுதான் முக்கியம்.
வருங்காலத்தில் வீரர்களைத் தெரிவு செய்வது யாராக இருந்தாலும் இதனைப் புரிந்து செயற்படவேண்டும் என நான் கருதுகின்றேன். சிறந்த வீரர் ஒருவர் வாங்கில் அமர்ந்திருந்தால் ஒருவராலும் கற்க முடியாது’ என்றார் மாலிங்க.
-metro