
அண்மையில் இனவாத தீக்கிரையில் மிகப்பெரும் இழப்பை சந்தித்த மினுவாங்கொட "டயமண்ட் பேஸ்டா" நிறுவனத்தின் மீதான இனவாத கொள்ளை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இலங்கையில் பல மில்லியன் பெறுமதிவாய்ந்த உபகரணங்களுடன் மினுவாங்கொடை நகரில் மிக சிறப்பாக இயங்கி வந்த டயமண்ட் பேஸ்ட்டா நிறுவனம் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தீ வைப்பு சம்பவத்தில் முற்று முழுதாக எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
தற்போது புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தினமும் பல்வேறு சூழ்ச்சிகளுக்கு உள்ளாகி வருகிறது “பேஸ்ட்டா” நிறுவனம்.
பொலிஸ் துறை, CID மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பவற்றில் எல்லாம் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்திருந்தபோதிலும் தினமும் நேரடி இனவாத அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்து வருகிறது இந்த நிறுவனம்.
இத்தனைக்கும் காரணம் அதன் நிறுவனர் ஒரு இஸ்லாமியர் என்பதுவேயாகும். பகல் வேளையில் நேரடியாக வந்து அச்சுறுத்தல் விடுத்து செல்லும் இனவாத கும்பல் இரவு வேளைகளில் அங்கு வந்து பெறுமதி வாய்ந்த கேபிள்கள் மற்றும் உபகரணங்களை திருடி செல்கின்றனர்.
தற்போது CCTV கமெராக்கள் பொருத்தியிருக்கின்ற நிலையிலும் எவ்வித அச்சமும் இல்லாமல் இந்த இனவாத கும்பல் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளியை அச்சுறுத்தி கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்ற காட்சியே இதுவாகும்.
இது தொடர்பில் மீண்டும் பொலிசாரிடமும், குற்றப்புலனாய்வு பிரிவிடமும் முறைப்பாடு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் நமக்கு தெரிவித்தார்.