
ஊர்காவற்துறையிலுள்ள வைத்திய அதிகாரியின் விடுதியில், நான்கு முஸ்லிம்கள் விலை உயர்ந்த வாகனத்தில் வந்து நான்கு நாட்களாக தங்கியுள்ளனர் என இராணுவத்தினருக்கு, அந்த பகுதியிலுள்ள சிலர் இரகசிய தகவல் கொடுத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் இராணுவத்தினர் அதிரடி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். பவள் கவச வாகனங்கள் சகிதம் விடுதியை முற்றுகையிட்ட படையினர், கதவுகள் மற்றும் யன்னல்களிற்குள்ளால் அதிரடியாக நுழைந்தனர்.
சம்மாந்துறையை சேர்ந்த அந்த வைத்திய அதிகாரியின் குடும்பத்தின் நான்கு உறுப்பினர்கள் அங்கு இருந்தனர். தேடுதலில் பயணப்பொதிகளையும் சோதனையிட்டனர். அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்தும் நோக்கத்துடன், ஊர்காவற்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அந்த குடும்பம் ஊர்காவற்துறை பொலிஸ், சம்மாந்துறை பொலிஸில், உரிய பதிவுகளை மேற்கொண்டு, அங்கு தங்கியிருந்தது தெரிய வந்தது. வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை மேற்கொள்வதற்காக, அந்த குடும்பம் அங்கு தங்கியிருந்தது விசாரணைகளில் தெரிய வந்தது.இதையடுத்து, இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கிருந்து சென்றனர். எனினும், வைத்திய அதிகாரி இதனால் மனம் வெறுத்து, நேற்றுக்காலையே குடும்பத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.