
தென் ஆபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு20 போட்டியில் தென் ஆபிரிக்க அணி 45 ஓட்டங்களால் டக்வர் லுவிஸ் அடிப்படையில் வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 20 ஓவர்களில் 198 ஓட்டங்களை பெற்றது.
199 என்ற இலக்கை நோக்கி வந்த இலங்கை அணி முதல் பவர் ப்லே இலேயே 4 விக்கட்டுக்களை இழந்தது. அவிஷ்க பெர்ணாண்டோ இம்முறையும் பிரகாசிக்க தவறினார். அதிரடியாக தனது துடுப்பாட்ட திறமையினை வெளிப்படுத்திய நிரோஷன் திக்வெல்ல 22 பந்துகாளில் 38 ஓட்டங்களை பெற்ற போதிலும் இசுரு உதானவை தவிர வேறெவரும் பிரகாசிக்கவில்லை. இசுரு உதான இப்போட்டியிலும் 4 சிக்சர்கள் அடங்களாக 23 பந்துகளில் 36 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். தென் ஆபிரிக்க வீரர் எண்டில் பிலுக்குவாயோ 3 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
போட்டியின் நடுவில் இலங்கை அணி 11.1 ஓவர்களில் 111 ஓட்டங்களை பெற்ற நிலையில் மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டது. பின்பு டக்வத் லூவிஸ் அடிப்படையில் 35 பந்துகளுக்கு 72 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலை இலங்கை அணிக்கு ஏற்பட்டது. 15.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 137 ஓட்டங்களை இலங்கை அணி பெற்று தோல்வியினை தழுவியது.
தென் ஆபிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரொன்றை வென்ற ஆசிய அணியாக இருந்த போதும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளையே தழுவி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கில் தொடரை தென் ஆபிரிக்கா அணி வென்று , இருபதுக்கு20 போட்டித் தொடரையும் 3-0 என்ற கணக்கில் தொடரை தன்வசமாக்கிக் கொண்டது.
மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை அணி தொடர் தோல்விகளை அடைந்து வரும் நிலை நீடித்தால் இரு மாதங்களில் நடக்கவிருக்கும் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் எவ்வாறு தனது திறமைகளை வெளிப்படுத்தப் போகிறது என ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
மேலும் இலங்கை மாகாணங்களுக்கு இடையிலேயான 50 ஓவர்கள் கொண்ட போட்டிகள் ஏப்ரல் 1 ஆம் திகிதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளன. இதன்போது பிரகாசிக்க இருக்கும் வீரர்களுக்கு உலகக் கிண்ண தொடருக்கான அதிக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.