கடலில் குளிக்கச் சென்ற இரண்டு பேர் கடலில் மூழ்கி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று (02) மாலை புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புத்தளம் இலந்தையடி பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் (60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் (22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மூன்று இளைஞர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனை அவதானித்த இளைஞர்களின் பாட்டன் குறித்த இளைஞர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருவரைக் காப்பாற்றி கரையில் விட்டுவிட்டு மற்றுமொருவரைக் காப்பாற்ற முயற்சித்த வேளை பேரன் மற்றும் பாட்டன் ஆகிய இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது, அப்பகுதி மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இலந்தையடி பகுதியில் ஒருவர் சடலமாக கரையொதிங்கியுள்ளார். மற்றுமொருவர் ஆலங்குடா கடற்கரைப் பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.