
துருக்கியின் காஜியண்டெப் பகுதியில் இருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. துருக்கி பேரிடர் மற்றும் அவசர மேலாண்மை அமைப்பு, “கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள பசார்சிக் நகரத்தில் மையம் கொண்டு 7.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.
மலாத்யா, தியார்பாகிர் மாகாணங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளன.
எனினும், உயிரிழப்புகள் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம், பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
இதன்காரணமாக அந்நாட்டில் உச்சகட்ட அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் லெபனான் மற்றும் சிரியா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.


