
முறையற்ற பாலியல் தொடர்பு காரணமாக பிறந்த சிசுவை தனது வீட்டின் பின்புறத்தில் உயிருடன் புதைத்துக் கொன்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் மருதங்கேணி காவல்துறையினரால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேணி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட தாழையடி கிராமத்தில் வசிக்கும் 36 வயதான குறித்த பெண் தனது வீட்டிலேயே குழந்தையை கடந்த முதலாம் திகதி பிரசவித்துள்ளார்.
அவர் அங்கு சிசுவை வீட்டின் பின்புறம் கொண்டு சென்று குழி தோண்டி புதைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் நேற்று மதியம் சிசுவை புதைத்த இடத்தை நாய் ஒன்று தோண்டி, சிசுவின் சடலத்தை இழுத்துச் செல்லும் போது அருகில் இருந்த வீட்டின் பெண்ணொருவர் அதனைக் கண்டு முயல் ஒன்றை நாய் இழுத்துச் செல்வதாக நினைத்து அதனைத் தாக்கியுள்ளார்.
அதனையடுத்து நாய் குழந்தையை விட்டுச் சென்ற நிலையில், அதனை அவதானித்த பெண் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசுவின் சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளை அடுத்து சந்தேகத்திற்குரிய பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
தாய் கடந்த 10 மாதங்களாக கர்ப்பிணியாக இருந்ததாகவும் நேற்று சிசுவொன்றை பிரசவித்தாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.
குறித்த பெண் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.