
பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு கடந்த 03 மாதங்களாக விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திகோ குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திலினி பிரியமாலி இன்று மாலை (27) கொழும்பு விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளார்.
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் விதித்த சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னரே அவர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
திலினி பிரியமாலி நிதிக் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது, இரண்டு தடவைகள் சட்ட விரோதமாக கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் சிறைத்துறையினரால் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதவான் பிணை வழங்கியதுடன் இன்று பிற்பகல் திலினி பிரியமாலி சகல பிணை நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் பின்னர் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இதன்படி அவர் 08 வழங்குகளுக்கான பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார்.
திலினி பிரியமாலிக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான 08 சரீரப் பிணைகளும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 20 சரீரப் பிணைகளும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சிறையில் இருந்து வெளிவந்த திலினி பிரியமாலி தான் சிறைச்சாலையில் ஓய்வாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்ததாக குறிப்பிட்டார்.
ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, தன்மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளதன் காரணமாக அதுகுறித்து கருத்து வெளியிட முடியாது என்றார்.
மேலும், நான் செய்த மற்றும் செய்யாத தவறுகளைக் கொண்டு ஊடகங்கள் என்மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து விட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவிக்க வேண்டும். அவர்களே நான் குற்றவாளி என தீர்ப்பளித்து விட்டனர். விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒருவர் கட்டாயமாக குற்றவாளியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.
அவர் சந்தேக நபராகவோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவராகவோ இருக்கலாம். எனது எதிர்காலம் பற்றி எந்த கவலையும் இல்லை. பாதிப்புகள் எதுவும் இல்லை என்றார்.
அதேநேரம், இந்த நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)