
பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையின் முயற்சிகளுக்கு உதவுமாறு சவூதி அரேபியாவின் புதிய தூதுவரை பிரதமர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினார்.
அண்மையில் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த தூதுவர் காலித் பின் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி, திறமையான இலங்கைத் தொழிலாளர்களுக்கு தனது நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதே தனது பிரதான பணியாக இருக்கும் என்று கூறினார்.
நேற்று (16) பிரதமரை சந்தித்த தூதுவர், குறுகிய காலத்திற்குள், சவுதி அரேபியாவில் இலங்கையின் திறன் மற்றும் அரை திறன் கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கையை தற்போது 180,000 இலிருந்து 400,000 ஆக உயர்த்த முடியும் என்றார்.
"நான் இலங்கையை நேசிக்கிறேன், உங்கள் நாட்டிற்கு ஆதரவளிக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று அவர் உறுதியளித்தார்.
முதலீட்டுச் சபையின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தளர்த்தப்பட்ட விசா விதிமுறைகள் மற்றும் முதலீட்டு வசதித் திட்டங்கள் இலங்கைக்கு அதிகமான சவூதி முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என்று பிரதமர் கூறினார்.
மேலும் எரிசக்தி, மீன்பிடி மற்றும் விவசாயத் துறைகளில் முதலீடு செய்ய சவுதி அரேபியாவுக்கு வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் கூறினார். சவூதி அபிவிருத்தி நிதியத்தின் புதுப்பிக்கப்பட்ட உதவித் திட்டங்களின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் இலங்கைக்கான சவூதி ஏர்லைன்ஸின் விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த சந்திப்பின் போது பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் சவூதி இலங்கை நட்புறவு சங்கத்தின் நக்கீப் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டனர். (யாழ் நியூஸ்)