நேற்று (06) இரவு மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற குடும்ப தகராறு காரணமாக ஆண் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் 17 வயது மகன் மற்றும் 3 பெண்கள் உட்பட 06 பேரை கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சந்திவெளி கலலூர் வீதி பாலைத்தேனாவைச் சேர்ந்த 38 வயதுடைய கந்தசாமி இளையராஜா என்பவரே இவ்வாறு வெட்டிக் கொலை செயயப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்திவெளி வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதியிலுள்ள கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தாயார் வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட வாய்தர்க்கம் சண்டையாக உருவாகியதையடுத்து மனைவியின் உறவினர்கள் மைத்துனர் மீது கத்தியால் வெட்டியதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இந்த கத்தி வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட உயிரிழந்தவரின் 17 வயதுடைய மகன் மற்றும் 03 பெண்கள் உட்பட 06 பேரை கைது செய்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.